| ADDED : ஜூலை 13, 2024 07:10 AM
சிவகங்கை : தேவகோட்டை அருகே கொத்தடிமையாக இருந்த தொழிலாளர்கள் 4 பேரை மீட்டு, அவர்களுக்கு நிவாரண தொகை ரூ.1.20 லட்சத்தை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகர் சீனிவாசபுரம் ஆர்.பிரகாஷ் அம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நல உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜோதி, தொழிலாளர் நல துணை ஆய்வாளர் வேலாயுதம் உள்ளிட்ட குழுவினர் தேவகோட்டை தாலுகா, புளியால் அருகே சின்னபிரம்புவயலில் ஆய்வு செய்தனர். அந்த ஊரை சேர்ந்த கண்ணன் மகன் சசிவர்ணம் என்பவர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கணவன், மனைவி, முதியவர், சிறுவனை கொத்தடிமை தொழிலாளராக பயன்படுத்தி வந்தது தெரிந்தது.அவர்கள் நான்கு பேரையும் இக்குழுவினர் மீட்டு வந்தனர். இவர்களுக்கு மறுவாழ்வு நிதியில் இருந்த தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.1.20 லட்சத்தை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார். இவர்களை கொத்தடிமையாக பயன்படுத்திய சசிவர்ணம் மீது தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.