அமராவதிபுதுாரில் ஆக. 19ல் வேளாண்மை கண்காட்சி
சிவகங்கை: காரைக்குடி அருகே அமராவதிபுதுார் கிராமிய பயிற்சி மையத்தில் ஆக., 19 ல் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு, கண்காட்சி நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் பெரும்பாலான விவசாயிகள் உயிர்ம வேளாண்மை (இயற்கை வேளாண்மை) முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். பயிருக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இயற்கையிலேயே கிடைக்கின்றன. ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மண்ணில் அங்கக கரிமம் குறைந்துள்ளது. நச்சுப்பொருள்கள் கலப்பில்லாத உணவு பொருட்களை உறுதிபடுத்துவதற்கு, உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆக., 19ல் அமராவதிபுதுார் கிராமிய பயிற்சி மையத்தில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறுகிறது. வேளாண்மை துறை சார்பில் அரங்குகள் அமைத்து, இயற்கை இடுபொருட்கள், பாரம்பரிய பயிர் ரகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளது. இதில், விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.