உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பிள்ளையார்பட்டி பாதுகாப்பில் குளறுபடி: பக்தர்கள் தவிப்பு

 பிள்ளையார்பட்டி பாதுகாப்பில் குளறுபடி: பக்தர்கள் தவிப்பு

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டியில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் வருகைக்கேற்ப பாதுகாப்பு திட்டமிடல் இல்லாததால் பக்தர்கள் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இக்கோயிலுக்கு வழக்கமாக பஸ் ஸ்டாண்டிலிருந்து கோயிலுக்கு வரும் ரோட்டிலும், கோயில் முன்புற ரோடு வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறை கூடுதலாக நான்கு வழிச்சாலை வழியாகவும் பக்தர்கள் வந்த வாகனங்களை அனுமதித்தனர். இதனால் 4 வழிச்சாலை வழியாக மருதங்குடி ரோட்டில் வந்த பக்தர்கள், மலைக்கு பின்புறம் வந்த பக்தர்கள் வரிசைக்கான போலீஸ் தடுப்பையும் மீறி ஏறி சென்றனர். அங்கு போதிய போலீசார் இல்லாததால் தடுக்க முடியாமல் தவித்தனர். வழக்கத்திற்கு அதிகமான பக்தர்கள் வருகையால் வழக்கமான நிழற்கொட்டகையுடன் கூடிய வரிசை காலை முதல் தொடர்ந்து மாலை வரை பக்தர்களால் நிரம்பியது. கோயில் கிழக்கு நுழைவு வாயில் அருகேயும் சிறப்பு தரிசனத்திற்கான வரிசையிலும் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அது தற்காலிகமாக மூடப்பட்டது. அதை சரி செய்ய போலீசார் இல்லாததால் திணறினர். பின்னர் மலைக்கு பின்புறம் உள்ள சிறப்பு தரிசன வரிசையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்து வெளியேற வைக்காததால் வெளியே பக்தர்கள் 3 மணி நேரம் வரை காத்திருக்க நேரிட்டதாக பக்தர்கள் வருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ