உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்சி பிரமுகர்களால் அதிகாரிகளுக்கு டார்ச்சர்

கட்சி பிரமுகர்களால் அதிகாரிகளுக்கு டார்ச்சர்

பழையனுார்: சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் தகுதியில்லாத நபர்களுக்கு கடன் வழங்க கட்சி பிரமுகர்கள் நிர்பந்தம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு தற்போது பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை தாமதமாக பெய்ததாலும், வைகை ஆற்றில் நீர்வரத்து தற்போது தான் தொடங்கியுள்ளதாலும் விவசாய பணிகள் தற்போது தான் தொடங்கியுள்ளன.ஏனாதி , கணக்கன்குடி, பெத்தானேந்தல், மஞ்சள்குடி உள்ளிட்ட பகுதிகளில் தற்போதுதான் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். விவசாய கூலி ஆட்கள் தட்டுப்பாடு, விதை நெல், உரம் கிடைக்காதது உள்ளிட்டவற்றால் பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஏக்கருக்கு 35 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவாகி வரும் நிலையில் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கி வருகிறது. ஏக்கருக்கு 30ஆயிரத்து 700 வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு தனி நபர் கடன் 1 லட்சத்து 60 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் எல்லைக்குட்பட்ட சாகுபடி பரப்பளவிற்கு ஏற்ற அளவு தான் கடன் வழங்கப்படும், அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சி பிரமுகர்கள், சொசைட்டி தலைவர்கள் சிலர் போலியான ஆவணங்கள் தயார் செய்து கடன் வழங்க நிர்ப்பந்தம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பழையனுார் கூட்டுறவு வங்கியில் நான்காயிரத்து 200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 25 நபர்களுக்கு இதுவரை 18லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் தகுதியில்லாத விவசாயிகளுக்கு கடன் வழங்க நிர்ப்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது. கடன் வழங்க மறுக்கும் அலுவலர்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு புகார் கடிதம் கொடுப்பதாகவும் அதிகாரிகள் புலம்புகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் பணியை ஆய்வு செய்ய வேண்டும், முறைகேடு செய்ய துாண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை