உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டணம் செலுத்த மறுத்து தகராறு சுங்கச்சாவடியில் ஸ்தம்பித்த வாகனங்கள்

கட்டணம் செலுத்த மறுத்து தகராறு சுங்கச்சாவடியில் ஸ்தம்பித்த வாகனங்கள்

திருப்பாச்சேத்தி:சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சலுகைக் கட்டணம் கூட செலுத்த மறுத்ததால் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர். மதுரையில் , தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வேன், பஸ் ஆகியவற்றில் சென்றனர்.திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் பள்ளி வாகனங்களுக்கு 1,250 ரூபாய் கட்டணம் செலுத்த ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அரசு நடத்தும் மாநாட்டுக்கு செல்வதால் கட்டணம் செலுத்த முடியாது என மறுத்தனர்.இதனால், சுங்கச்சாவடியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. தகவலறிந்து, திருப்பாச்சேத்தி போலீசார் வந்து சமரசம் பேசினர். பின், வாகனங்களுக்கு சலுகைக் கட்டணமாக 250 ரூபாய் மட்டும் செலுத்த சுங்கச்சாவடி நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆனால், அதையும் செலுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மறுத்தனர். நீண்ட நேர வாக்குவாதத்துக்குப் பின் கட்டணம் செலுத்தாமல் பள்ளி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. வாகனங்களில் வந்தவர்கள் கூறுகையில், 'ராமநாதபுர மாவட்ட சுங்கச்சாவடியில் கலெக்டர் உத்தரவுப்படி கட்டணமின்றி செல்ல அனுமதித்தனர். 'சிவகங்கை மாவட்ட சுங்கச்சாவடியில் மட்டும்தான் அனுமதிக்க மறுத்தனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்