| ADDED : ஜூன் 05, 2024 11:55 PM
போடி:பெங்களூரு குல்பர்கா பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி ரெட்டி, 50, என்பவர் காரை ஓட்டி வந்தார். இவரது மனைவி அம்பிகா, 42; மகள் கிருத்திகா, 18; மகன் கரண், 11; உறவினர்கள் விஜய், 35; அவரது மனைவி ஹர்ஷா, 24; இவரது தங்கை வைசாலி, 18, ஆகிய ஏழு பேரும், கேரளாவில் மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு அந்த காரில் சுற்றுலா சென்றனர்.பின், போடிமெட்டு வழியாக நேற்று மதியம் காரில் வந்தனர். முன்னால் சென்ற காரை முந்தி செல்வதற்காக வேகமாக காரை ஓட்டினார் சஞ்சீவி ரெட்டி. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், போடிமெட்டு மலைப்பாதை நான்காவது வளைவில், 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. குரங்கணி போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள், கயிறு கட்டி, பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்டனர். இதில், சஞ்சீவி ரெட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். அம்பிகா, கிருத்திகா, கரண் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.