| ADDED : ஜூலை 01, 2024 05:34 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் முடங்கியுள்ள தெப்பக்குளம் சீரமைப்புப் பணிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இக்கோயில் மிகவும் புராதானமானது. தென் காளஹஸ்தி என்றழைக்கப்படும் இக்கோயில் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது. ராகு கேது தம்பதி சகிதமாக தனித் தனிக் கோயில்களில் எழுந்தருளியுள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் மாலை 4.30 முதல் 6:00 மணி வரை இங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்கின்றனர்.இக்கோயில் திருப்பணி வேலைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து, கடந்த மார்ச்சில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடைபெறும் போது, தெப்பக்குளத்தை தயார் செய்திட வேண்டும் என்று பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் என்ன பராமரிப்புப் பணிகள் அரைகுறையாக நடந்து, முடங்கி விட்டன.குறிப்பாக தெப்பக்குளத்தை புதுப்பிக்க அரசு சார்பில் ரூ.21 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அந்த நிதி போதவில்லை என்பதால், உபயதாரர்களும் பணி செய்துள்ளனர். இருந்த போதும் குளம் சீரமைக்கும் பணிகள் நிறைவு பெறவில்லை. பணிகள் முடங்கியுள்ளன. தெப்பக்குளத்தை புதுப்பிக்கும் பணிகள் முழுமை அடையவில்லை. தெப்பத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஹிந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள செயல் அலுவலர் தெப்பக்குளம் சீரமைக்கும் பணியை துவக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.