| ADDED : ஜூலை 20, 2024 02:48 AM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.இந்த அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் ராகேஷ் காஷ்யப் தலைமையிலான கண்காணிப்பு குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையில் உள்ளது. துணை குழுவில் தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் கிரண் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.இக்குழு 2024 பிப்.15ல் அணையின் நீர்மட்டம் 129.65 அடியாக இருந்தபோது ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் நேற்று நீர்மட்டம் 127.35 அடியாக இருந்த நிலையில் (மொத்த உயரம் 152 அடி) அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மெயின் அணை, பேபி அணை, ஷட்டர், நீர்க்கசிவு காலரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அணையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் இதுவரை நடந்த பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் 2,4,6 ஆகிய மூன்று ஷட்டர்களை இயக்கிப் பார்க்கப்பட்டது.அணைப்பகுதியில் பொருத்தப்பட்ட நிலநடுக்க கருவி (சீஸ்மோகிராப்), நிலஅதிர்வுக் கருவி (ஆக்சிலரோகிராப்) ஆகியவற்றை பார்வையிட்டு அதன் இயக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மாலையில் குமுளி 1-ம் மைலில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் இக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதற்கான ஆய்வு அறிக்கையை மத்திய கண்காணிப்பு குழுவிற்கு அனுப்பி வைக்கும்.