| ADDED : ஏப் 28, 2024 04:13 AM
கம்பம்: மணலாறு முதல் இரவங்கலாறு வரை 10 கி.மீ., தூரத்திற்கு ரோடு அமைக்கும் பணிகள் இழுபறி நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. ஒப்பந்ததாரர்களை வேலை வாங்க வேண்டிய நெடுஞ்சாலை துறை வேடிக்கை பார்க்காமல், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் நீண்டகாலமாக தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ரோட்டை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாநில நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது.சின்னமனுாரில் இருந்து இரவங்கலாறு வரை உள்ள 46 கி.மீ., தூர ரோட்டை ரூ.80 கோடியில் புதுப்பிக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, கடந்த 2017ல் பணிகள் துவங்கின. சின்னமனுாரில் இருந்து மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு வரை 36 கி.மீ., தூரம் ரோடு புதுப்பிக்கப்பட்டது. மணலாறு முதல் இரவங்கலாறு வரை கடைசி 10 கி.மீ. துாரத்திற்கு ரோடு புதுப்பிக்கப்படவில்லை.கடந்த 2019ல் கொரோனோ பெருந்தொற்று ஆரம்பமானதால் பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் 2021 ல் பணிகளை துவங்க ஆரம்பித்த போது, வனத்துறை அனுமதிக்கவில்லை.காரணம் 2020 ல் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதனால் டில்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையிடம் அனுமதி பெற்று பணிகளை துவங்க அறிவுறுத்தப்பட்டது.அதன்பின் கடந்த 2 ஆண்டுகளாக ரோடு புதுப்பிக்கும் பணி முடங்கியது. மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக இருந்ததால் வாகன போக்குவரத்து சிரமமாக மாறியது. கடந்தாண்டு இந்த 10 கி.மீ., ரோட்டை அமைக்க தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை அனுமதி வழங்கியது. அதன் பின் நெடுஞ்சாலைத்துறை பணிகளை துவக்கியது. அனுமதி கிடைத்தவுடன் 3 கி.மீ., தூரம் ரோடு வேகமாக அமைக்கப்பட்டது.மீதமுள்ள 7 கி.மீ., தூரத்தை வரும் டிசம்பருக்குள் முடிக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்தது. ஆனால் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் பணிகள் செய்வதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றனர். கடந்த 2017ல் ஆரம்பித்த பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இடையில் கொரோனா தொற்று என 2 ஆண்டுகளை கழித்தாலும் 5 ஆண்டுகளாகிறது. ஒப்பந்ததாரர்களை சுண்டி வேலை வாங்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை வேடிக்கை பார்க்கிறது.