உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜம்புலிப்புத்துார் கோயில் தெப்பம்வேலி அமைத்து பாதுகாக்க ஏற்பாடு

ஜம்புலிப்புத்துார் கோயில் தெப்பம்வேலி அமைத்து பாதுகாக்க ஏற்பாடு

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் தெப்பத்தை பாதுகாக்க கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் முடிந்து உபயதாரர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.கோயில் முன்புறத்தில் இருந்த தெப்பம் உபயதாரர் மூலம் பல ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் சேரும் மழை நீர் தெப்பத்தில் தேங்கும்படி குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் தெப்பத்தில் தற்போது முழு அளவில் மழை நீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழை நீரில் நூற்றுக்கணக்கில் மீன் குஞ்சுகளும் விடப்பட்டுள்ளன. அப்பகுதியில் சிறுவர்கள் கோயில் தெப்பத்தில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் தெப்பத்தில் குப்பை போட்டு அசுத்தப்படுத்தினர். தெப்பத்தில் தேங்கியுள்ள நீரின் பாதுகாப்புக்காக தற்போது தெப்பத்தைச் சுற்றிலும் இரும்பு கம்பிகளாலான பாதுகாப்பு வேலி அமைக்கப்படுகிறது. கோயில் நிர்வாக அனுமதி இன்றி தெப்பத்தில் இறங்குவதை தடுக்க படித்துறையில் இரும்பு கம்பிகளால் கதவுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. தூய்மையான நீரால் நிரம்பி பாதுகாப்புடன் உள்ள தெப்பம், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்