| ADDED : ஜன 04, 2024 06:23 AM
போடி: போடி அம்மாபட்டி ஊராட்சியில் உள்ள மந்தைகுளம் கண்மாய் தூர்வாரப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் முட்புதர்களாலும், நீர்வரத்து பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்து இருப்பதாலும் மழை நீரை கண்மாயில் தேக்க முடியாத அவல நிலை தொடர்கிறது.இவ்வூராட்சி அலுவலகம் அருகே 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மந்தைகுளம் கண்மாய். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கழுகுமலை பகுதிகளில் பெய்யும் மழை நீரானது ஊத்தோடை, சில்லமரத்துப்பட்டி, சுத்தகங்கை உள்ளிட்ட நீரோடைகள் வழியாக இக்கண்மாய்க்கு நீர் வரத்து உள்ளது. இதன் மூலம் 500 ஏக்கருக்கு மேல் நேரடியாகவும், 200 ஏக்கருக்கு மேல் கிணறுகளின் நீர் ஊற்று அதிகரித்து, இறவைப்பாசன விவசாயிகள் பயனடைந்தனர். துவக்கத்தில் சுத்தகங்கை நீர்வரத்து ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததன் மூலம் சில்லமரத்துப்பட்டி, அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி பகுதியில் விவசாய சாகுபடி அதிகரித்தது. ஆக்கிரமிப்பு
தற்போது சுத்தகங்கை ஓடை, ஊத்தோடை பகுதிகளில் இருந்து கண்மாய்க்கு வரும் 100 அடி அகலம் உள்ள நீர்வரத்து ஓடையை தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் பாதை குறுகளாகவும், ஓடை இருக்கும் இடமே தெரியாமல் உள்ளது. இதனால் சில்லமரத்துப்பட்டி, அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் வரத்து வருவது இல்லை. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீரை தேக்கவும், கிணறுகளில் நீர் மட்டம் உயராத நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய் தூர்வாரப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் செடிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் மழை காலங்களில் கூட கண்மாயில் நீரை தேக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.