| ADDED : நவ 24, 2025 09:24 AM
தொழிலாளியை தாக்கியவர்கள் மீது வழக்கு தேனி: தப்புக்குண்டு அண்ணாநகர் கூலித்தொழிலாளி ஜோதிராஜ் 49. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சேதுபதிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்தது. இந்நிலையில் தப்புக்குண்டு பகுதியில் ஜோதிராஜ் நின்றிருந்தார். அங்கு வந்த சேதுபதி, அவருடன் வந்த அருண்குமார், வினோத் உள்ளிட்டோர் ஜோதிராஜை திட்டித் தாக்கினர். காயமடைந்தவர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, போலீசில் புகார் அளித்தார். சேதுபதி, அருண்குமார், வினோத் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விபத்தில் பெண் காயம் தேனி: வடபுதுப்பட்டி விஜயகாந்தன் 43. இவரது மாமியார் பாண்டியம்மாள். இவருக்கு மாத்திரை வாங்க, தேனி நகர் பகுதிக்கு காலேஜ் ரோடு வழியாக டூவீலரில் சென்றனர். விஜயகாந்தன் டூவீலரை ஓட்டினார். அப்பகுதியில் உள்ள வேகத் தடையில் டூவீலர் ஏறி இறங்கியது. அப்போது நிலை தடுமாறி பாண்டியம்மாள் கீழே விழுந்தார். காயமடைந்தவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர். துணிக்கடையில் திருட்டு தேவதானப்பட்டி: அல்அமீன் நகரைச் சேர்ந்தவர் சேக்அப்துல்லா. பழைய அப்சரா தியேட்டர் எதிர்ப்புறம் துணிக்கடை நடத்தி வருகிறார். இரவில் கடையை அடைத்து விட்டு காலையில் சென்று பார்க்கும் போது, கடையின் ஷட்டர், பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாவில் இருந்த ரூ.8 ஆயிரம், 35 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர். அரசு பஸ் லாரி விபத்து: பயணி காயம் பெரியகுளம்: ஜெயமங்கலம் வ.உ.சி., தெரு சேது 54. அரசு பஸ் டிரைவர். வத்தலக்குண்டில் இருந்து பெரியகுளத்திற்கு பஸ்சினை ஓட்டிச் சென்றார். கண்டக்டராக கண்ணன் உடனிருந்தார். டி.வாடிப்பட்டி அருகே பஸ் செல்லும் போது, பஸ்ஸின் பின்னால் வந்த லாரி, பஸ் மீது மோதி விபத்து நடந்தது. இதில் பஸ்சில் பயணித்த வேல் நகர் வடக்கு தெரு சுசிந்திரன் காயமடைந்தார். போலீசார் விபத்து ஏற்படுத்திய தேவாரம் டி.மூணான்டிபட்டி லாரி டிரைவர் பிரபாகரனிடம் 37, விசாரிக்கின்றனர். மதுபாட்டிலால் தாக்கிய இருவர் மீது வழக்கு தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி பட்டாளம்மன் கோயில் தெரு அஜய்குமார் 19. அதே ஊரைச் சேர்ந்த பெருமாள். இவரது சகோதரர் பெத்தனன் இருவரும், முன் விரோத தகராறில் அஜய்குமார் தலையில் மது பாட்டிலால் அடித்து காயப்படுத்தினர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அஜய்குமார் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர். மனைவி மாயம்: கணவர் புகார் ஆண்டிபட்டி: மொட்டனுாத்து கருப்பசாமி 29. இவர் அதே ஊரைச் சேர்ந்த ராமுத்தாயை 26, ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து, திருமணம் செய்தார். மகன் உள்ளார். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் மனைவியையும், மகனையும் மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, கருப்பசாமி திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். அவ்வப்போது ஊருக்கு வந்து பார்த்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நவ.,18ல் கோழிப்பண்ணைக்கு வேலைக்கு செல்வதாக ராமுத்தாய் தனது தாயாரிடம் கூறிவிட்டுச் சென்றார். திரும்ப வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து உறவினர்கள் கருப்பசாமிக்கு தகவல் தெரிவித்தனர். பல இடங்களில் தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கருப்பசாமி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.-