| ADDED : மார் 19, 2024 05:48 AM
கம்பம் : கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.லோக்சபா தேர்தலுக்கு நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலை அமைதியாக நடத்துவதில் போலீசாரின் பங்கு பிரதானமாகும். தேர்தலில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு சவாலானதாக இருக்கும். எனவே ரவுடிகள், சமூக விரோதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களின் போது ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் பதிவான வழக்குகள், அதில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் என்ன பிரச்னைகள் ஏற்பட்டதோ, அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.