| ADDED : ஜூலை 13, 2011 01:32 AM
திருநெல்வேலி;பாளை.அருகே அனல்மின் நிலைய ஊழியருக்கு 'லிப்ட்' கொடுத்து, நூதன வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.பாளை.,அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் தென்றல் நகரை சேர்ந்தவர்
சுப்பிரமணியன்(52). தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக
பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் பணிமுடித்து விட்டு
கேடிசி.,நகரில் இறங்கினார். அங்கிருந்து விஎம்சத்திரம் வழியாக வீட்டிற்கு
நடந்து சென்றார். அப்போது பைக்கில் சென்ற வாலிபர் ஒருவர்,'நான்
கிருஷ்ணாபுரம் வழியாக தான் செல்கிறேன். போகும் வழியில் உங்களை வேண்டுமானால்
இறக்கி விடுகிறேன். ஏறிக்கொள்ளுங்கள்' என்றார். அவரது பேச்சை நம்பி
சுப்பிரமணியன் பைக்கில் ஏறினார். ஆரோக்கியநாதபுரம் கடந்து செல்லும்போது,
இருட்டான ஓரிடத்தில் ஏற்கெனவே நின்றிருந்த ஒருவரின் அருகில் பைக்கை
நிறுத்தினான். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து சுப்பிரமணியத்திடம்
கத்தியை காட்டி மிரட்டி 2 ஆயிரத்து 800 ரூபாய் மற்றும் செல்போன், மோதிரம்
ஆகியவற்றை பறித்து சென்றனர்.இந்த நூதன வழிப்பறி குறித்து சுப்பிரமணியன்
பாளை.குற்றப்பரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து கோர்ட் அருகே போலீசார்
வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு பைக்கை வழிமறித்தனர்.
அந்த நபர்கள் போலீசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில்
அளித்தனர். இதனால் போலீசார் அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து
விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சுப்பிரமணியத்திடம் வழிப்பறியில்
ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இதுபோல் வேறு வழிப்பறி
சம்பவங்களில் தொடர்பு இருக்கிறா என்பது குறித்து குற்றப்பிரிவு போலீசார்
விசாரணை நடத்திவருகின்றனர்.