| ADDED : ஜூன் 05, 2024 01:26 AM
பொன்னேரி:பொன்னேரியில், ஆனந்தவல்லி அம்மை வலம் கொண்ட அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த கோவிலுக்கு உள்பிரகாரம், வெளிபிரகாரம் என, இரண்டு சுற்றுச்சுவர்கள் உள்ளன. உள்பிரகாரத்தில் கோவில் வளாகமும், வெளிபிரகாரத்தில் தென்னை தோப்பு, அன்னதானகூடம், கோசாலை, விநாயகர் சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன.வெளிப்பிரகார சுற்றுச்சுவர் செங்கல் மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்டவைகளை கொண்டு கட்டடப்பட்டவை. தற்போது, அவை சேதமடைந்து உள்ளது.கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் மழையின்போது, சுற்றுச்சுவரின் ஒவ்வொரு பகுதிகளாக சரிந்தது. இதனால், சுற்றுச்சுவரின் செங்கற்கள் சிதறி, ஆங்காங்கே வழி ஏற்பட்டுள்ளது.இதனால், வெளிநபர்கள் சேதமடைந்த பகுதிகள் வழியாக உள்ளே வந்து, மதுபானம் அருந்துவது, கஞ்சா புகைப்பது என, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவிலின் வெளி பிரகாரத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாதது, பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி வருகிறது. ஹிந்து அறநிலையத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, பழமை மாறாமல் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.