பொன்னேரி: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருஆயர்பாடி கள்ளுக்கடைமேடு சுடுகாடு பகுதியில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.40 கோடி ரூபாயில், நவீன எரிவாயு தகனமேடை கட்டுமான பணிகள் கடந்த, 2022ல் துவங்கப்பட்டது.எரிவாயு உருளை பொருத்தும் இடம், புகைப்போக்கி குழாய், ஆம்புலன்ஸ் வந்து நிற்க இடம், எரிவாயு சேமிப்பு கிடங்கு, ஜெனரேட்டர் அறை, அலுவலக அறை என, மொத்தம், 2,800 சதுர அடியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.சடலங்களை எரிவாயு வாயிலாக எரிப்பதற்கான இயந்திரங்கள், டிராலி, எரிவாயு குழாய் இணைப்பு, மின்இணைப்பு, சுற்று சுவர், பாதைவசதி உள்ளிட்ட அனைத்து பணிகளும், கடந்த ஆண்டு, ஜூலை மாதம் முடிந்தது.பணி முடிந்து ஓராண்டாக, மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி, லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் என பல்வேறு காரணங்களால் திட்டம் பயனுக்கு வருவதில் இழுபறி நீடித்து வந்தது.இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக பயனுக்கு கொண்டு வந்தார்.அதில்,பொன்னேரி நகராட்சியில் மேற்கண்ட நவீன எரிவாயு தகனமேடை, திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில், 40 லட்சம் ரூபாயில் பசுமை உரக்குடில், 43 லட்சம் ரூபாயில் வளமீட்பு மையம் மற்றும் நகராட்சி அலுவலக வளாகத்தில், 1 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கூடுதல் அலுவலக கட்டடம் ஆகியவை பயனுக்கு கொண்டு வரப்பட்டன.நிகழ்ச்சியில்,பொன்னேரி காங்.,- எம். எல்.ஏ., துரை சந்திரசேகர், பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம், நகராட்சி கமிஷனர் கோபிநாத் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.