உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கலாம் அறிவுரையை பின்பற்றினால் சாதிக்கலாம் தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி அறிவுரை

கலாம் அறிவுரையை பின்பற்றினால் சாதிக்கலாம் தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி அறிவுரை

திருவள்ளூர்:''அப்துல்கலாம் அறிவுரையை பின்பற்றினால், மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம்,'' என, 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி அறிவுரை வழங்கினார்.திருவள்ளூர் வட்டம், பாக்கம் அடுத்த கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா பள்ளியில், மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக 'தினமலர்' இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி பங்கேற்று மாணவர்களுக்கு, கல்வி உபகரணம் வழங்கி பேசியதாவது:மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நன்றாக கல்வி கற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மூன்று விஷயங்களை சுருக்கமாக பேச விரும்புகிறேன். ஒரு கிணற்றில் தண்ணீர் வற்றியதால், அங்குள்ள அனைத்து தவளைகளும் நாம் எப்படி இங்கிருந்து வெளியேறி தப்பிச் செல்வது என கூடி பேசின. ஒரு தவளை மட்டும், தாவி, தாவி படிப்படியாக மேலேறிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மற்ற தவளைகள், 'வேண்டாம், ஆபத்து' என எச்சரிக்கை விடுத்தன. ஆனால், அந்த தவளைக்கு காது கேட்காத போன்றும், மற்ற தவளைகள் தன்னை உற்சாகப்படுத்துவதாக கருதி, கிணற்றை விட்டு வெளியேறியது. அதே போல் மாணவர்களாகிய நீங்களும், உங்களால் முடியாது, என யார் என்ன கூறினாலும், அதை கருத்தில் கொள்ளாமல், பொறுமையுடன், கல்வி கற்று வாழ்க்கையில் உற்சாகமாக முன்னேற வேண்டும்.மற்றொரு விஷயம் சாதாரணமாக ஒரு கழுகிற்கு 25-30 ஆண்டுகளுக்கு பின், அதன் அலகு, இறகு, நகம் வலுவிழந்து விடும். அந்த சமயத்தில் அந்த கழுகு, யாருமில்லாத இடத்திற்கு சென்று, தன் அலகினையும், நகத்தையும் பாறையில் குத்தி, இறகை பிய்த்து, சிறிது காலத்திற்குப் பின், மீண்டும் தன் பழைய நிலையை அடைந்து, மேலும், 25 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும். அதே மாதிரி, நீங்களும் படிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்க வேண்டும்.மூன்றாவதாக, மூங்கில் மரத்திற்கு தண்ணீர் விட்டால், நான்கு ஆண்டுகளுக்கு பின் ஒரே வாரத்தில் 100 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் வாயிலாக, நீங்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கல்வி கற்கும் போது, பொறுமையாக உணர்ந்து, படித்தால், வாழ்க்கையில் முன்னேறலாம். பாரதியார், விவேகானந்தர் மற்றும் அப்துல்கலாம் ஆகியோரின் உபதேசத்தை உணர்ந்தால், நீங்களும் எதிர்காலத்தில் சாதிக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.சேவாலயா பள்ளி நிறுவனர் முரளி பேசியதாவது:செங்கல் சூளைகள் மற்றும் கிராம பகுதி நிறைந்த இங்கு, 1988ல் சேவாலயா பள்ளி துவக்கப்பட்டது. படிப்பறிவற்ற சிறுவர் - சிறுமியரை அழைத்து, இலவசமாக கல்வி கற்பித்து வருகிறோம். இதற்காக நாங்கள் பட்ட சிரமம் அதிகம். இருப்பினும். இங்கு கல்வி பயின்ற பலரும், டாக்டர், இன்ஜினியர் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இது நமக்கு பெருமை.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், உபயதாரர் கந்தசாமி, துணை தலைவர் கிங்ஸ்டன் ஆகியோர் பேசினர். முன்னதாக, மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி திறப்பு

கோடை விடுமுறைக்கு பின் கடந்த, 10ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. 62 நாட்களுக்கு பின் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களின் வருகையை எதிர்பார்த்த சேவாலயா பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் கொடுத்து வரவேற்றனர்.முன்னதாக வகுப்பறைகள் அனைத்தும் துாய்மை செய்யபட்டன. கழிப்பறைகள், விளையாடும் இடம், மாணவர்கள் கூடும் இடம் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி