| ADDED : ஏப் 30, 2024 10:26 PM
சென்னை:ஐ.ஐ.சி.ஏ., எனும் இந்திய இன்டோர் கிரிக்கெட் சங்கம் சார்பில், இன்டோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இலங்கையில், 21ல் துவங்கி, 29ல் நிறைவடைந்தது.இந்தியா உட்பட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 17 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில், இந்திய அணியில், தமிழக வீராங்கனையர் 11 பேர் இடம் பெற்றனர்.அனைத்து லீக் போட்டிகள் முடிவில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.இறுதி போட்டியில் மொத்தம் 16 ஓவர்கள் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில், ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஐந்து ரன்கள் வீதம் கழிக்கப்பட்டன. அதேபோல், ஒவ்வொரு நான்கு ஓவர்களுக்கும் பேட்ஸ்மேன்கள் மாற்றப்பட்டனர்.அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியினர், 16 ஓவர்களில், 127 ரன்களை அடித்தனர். அடுத்து பேட் செய்த இந்திய அணி துவக்கத்தில் இருந்து ரன்களை குவித்தது. பின், அடுத்தடுத்த விக்கெட் சரிந்ததால், ரன்கள் குறைந்தது.முடிவில், 16 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இலங்கை அணி முதலிடம் பிடித்து, சாம்பியன் கோப்பையை வென்றது.