| ADDED : ஜூலை 07, 2024 01:23 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த ரமணா நகர் பகுதியில், மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின் போது, அங்கிருந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன், அதை சரிசெய்வதற்காக, அங்கு பள்ளம் தோண்டப்பட்டது.தோண்டப்பட்ட பள்ளம், இதுவரை மூடப்படாமல் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால், அப்பகுதியை கடக்கும்போது வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து, அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது. குழாய் உடைப்பும் சரிசெய்யப்படாமல், நாள்முழுதும் குடிநீர் வெளியேறி வீணாகி வருவதுடன், சரிபார்ப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை ஒட்டி உள்ள மின்கம்பத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது.மின்கம்பம் திடீரென சாய்ந்து, அருகில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தால், பெரிய அளவிலான மின்விபத்து ஏற்படும் என, குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய பணிகளால், அசம்பாவிதங்கள் நேரிடும் வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.