திருவொற்றியூர்:திருவொற்றியூர், ராஜாஜி நகர், முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சுலைமான், 17; தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர்.இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு வாலிபர்கள், சுலைமானிடம், 'உன் அண்ணன் ஆசிப் எங்கே' எனக் கேட்டுள்ளனர். அதற்கு, சிறுவன் தெரியாது என கூறவே, வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரது மணிக்கட்டில் வெட்டி தப்பினர். அதே போல், திருவொற்றியூர், அஞ்சுமணி நகரைச் சேர்ந்த தினேஷ், 26, என்பவர், சத்தியமூர்த்தி நகரில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த, அதே வாலிபர்கள், அவரிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, மோதிர விரலில் வெட்டி தப்பினர். இருவரும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரித்தனர்.இதில், மணலி, சின்னக்கண்ணு தெருவைச் சேர்ந்த விஜய், 28, திருவொற்றியூரைச் சேர்ந்த மணிகண்டன், 20, என்பது தெரிய வந்தது. இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.