திருவள்ளூர்:திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன.இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும் செப்.7ல் நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுமக்களும், இந்து அமைப்பினரும் தங்கள் பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம்.மூன்று அல்லது ஐந்தாவது நாட்களில் அச்சிலைகள் அனைத்தும், மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும்.விநாயகர் சிலைகள் விற்பனைக்காக, காக்களூரில் தயாரிக்கும் பணியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஒரு அடி முதல் 10 அடி வரை சிலலைகள் தயாராகி வருகின்றன. இதுகுறித்து சிலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களாக இங்கு தங்கி, விநாயாகள் சிலைகள் தயாரித்து வருகிறோம். இங்கு ஒரு அடி முதல் 10 அடி வரை, ரசாயணம் கலக்காத, இயற்கையான பொருட்களை கொண்டு, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் ஒரு அடி உயரத்திலும், வழிபாடு செய்வதற்காக, 10 அடி வரையிலும் சிலைகள் பல்வேறு உருவங்களில் தயாரித்து வருகிறோம். ஒரு அடி முதல் 5 அடி வரையிலான சிலைகள், 100-500, 5-10 அடி வரை 8,000-13,000 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இதே போல் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் சதுர்த்தியின்போது பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை குடியிருப்பு மற்றும் பிரதான சாலைகளின் அருகில் வைத்து வழிப்படுகின்றனர். பின் அரசு தெரிவிக்கும் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப். 7ம் கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி, கடலுார் ஆகிய பகுதிகளில் இருந்து, அச்சுவார்க்கப்பட்ட விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு, அவற்றிற்கு அழகாக வர்ணம் பூசி அழகுபடுத்தப்படுகிறது.சிம்மவாகனம், நந்திவாகனம், மயில்வாகனம், அன்னவாகனம் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிமைக்கப்பட்டு உள்ளன.தற்போது, பொன்னேரி அடுத்த வெள்ளோடை, கிருஷ்ணாபுரம், சைனாவரம் ஆகிய பகுதிகளில், 400க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.விநாயகர் சிலை விற்பனையாளர்கள் கூறியதாவது:விநாயகர் சிலைகள் முழுதும், எந்தவொரு ரசாயனமும் இல்லாமல், கல்மாவு, தேங்காய்நார், காகிதகூழ் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது.வர்ணம் பூசுவதற்கும், ரசாயன இல்லாத இயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுசூழல் மாசு இல்லாமல் எளிதில் கரையக்கூடிய சிலைகளை மட்டுமே வடிவமைத்து விற்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.