திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஆகிய பகுதிகளில், 35 துணை மின்நிலையங்கள் உள்ளன.இந்த துணை மின்நிலையங்களில் இருந்து வீடுகள், வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.தற்போது, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நகரின் மக்கள் தொகை பெருகி வருவதாலும், புதிய வணிக வளாகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய மின் இணைப்பு பெற, ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், மின்வாரியத்திடம், மின்மீட்டர்கள் இல்லாததால், புதிய இணைப்புகள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.உதாரணமாக திருத்தணி நகரம் துணை மின்நிலையத்தில் மட்டும், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து, புதிய மின் இணைப்பு வழங்கக் கோரி, 300 பேர், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து முன்வைப்புத் தொகை செலுத்தியுள்ளனர். அந்த வகையில் மாவட்டம் முழுதும், இரு மாதத்தில் மட்டும், 1,000 பேர் புதிய இணைப்பு பெற விண்ணப்பித்துள்ளனர்.புதிதாக வீடு கட்டிவிட்டு, மின் இணைப்பு பெற முடியாததால், புதிய வீட்டிற்கு குடியேற முடியாமல், பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இது தவிர புதியதாக வீடு கட்டுபவர்கள் தற்காலிக மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ளனர்.இது குறித்து, மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒருமுனை மற்றும் மும்முனை மின் அளவை மீட்டர்கள், எங்கள் தலைமை அலுவலகத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து, அந்தந்த துணை மின்நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த இரு மாதமாக ஒரு முனை மின்மீட்டர் சப்ளை இல்லை. மும்முனை மின்சாரத்திற்கான மீட்டர்கள் ஒரளவுக்கு சப்ளை வருவதால், மும்முனை மின் இணைப்பு விரைந்து வழங்கி வருகிறோம்.ஒரு முனை மின் இணைப்பு அவசரமாக தேவைப்படுவர்கள் மின்வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட, எட்டு நிறுவனங்களிடம் பொதுமக்களே மின்மீட்டர் வாங்கிக்கொள்ள, மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு மின்மீட்டர் வாங்கியவர்கள் மின்வாரிய அலுவலர்களிடம் காண்பித்தால் மீட்டரை ஆய்வு செய்த பிறகு, அவற்றைப் பொருத்தி மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதலாக 300 யூனிட் இலவசம்
தமிழக அரசு, ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்தி அரசு பட்ஜெட்டில், சோலார் அமைக்கும் வீடுகளுக்கு கூடுதல், 300 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிப்பு செய்துள்ளது. இது குறித்து மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சேலார் அமைத்துள்ள வீடுகளுக்கு, மத்திய அரசு சார்பில், 300 யூனிட்டும், ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வரும், 100 யூனிட் மின்சாரம் என மொத்தம், 400 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படவுள்ளன. ஆனால் எவ்வளவு கி.வோ., மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்ற நிபந்தனைகள் குறித்து அரசாணை வெளியிடப்படவில்லை. மின் இணைப்பு இல்லாமல், சோலார் மூலம் மட்டும் விளக்குகள் உபயோகப்படுத்துபவர்கள், புதிதாக மின் இணைப்பு பெற்றால், அவர்களுக்கும் இலவச மின்சாரம் பொருந்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி, பிப். 4-
திருவள்ளூர் மாவட்டத்தில், மின் இணைப்பு வழங்கக் கோரி, வீடு மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகங்களில் முன்வைப்புத் தொகை செலுத்தி, 2 மாதங்கள் ஆகியும் மின்மீட்டர் இருப்பு இல்லாததால், 1,000 பேர் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.