செம்மஞ்சேரி:பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிம்மி, 21; திருநங்கை. கடந்த ஜன., 25ம் தேதி இரவு இவர் வீடு திரும்பவில்லை.அவரை காணவில்லை என பெற்றோர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை, தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.போலீசார் சிம்மியை தேடி வந்த நிலையில், ஜன., 28ம் தேதி செம்மஞ்சேரி, ராஜிவ்காந்தி சாலை அடுத்த முட்புதரில் அழுகிய நிலையில் ஒரு உடல் மீட்கப்பட்டது. இறந்தவர் கையில் வெட்டு விழுந்திருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.இதையடுத்து, மாயமான சிம்மியின் பெற்றோரை அழைத்துக் காட்டினர். அவர்கள் அது சிம்மி என உறுதி செய்தனர். உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிம்மி மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர்.உடல் மீட்கப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நான்கு திருநங்கையர் சிம்மி கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்து தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து, இந்த கொலையில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.இந்த நிலையில், கடந்த 3ம் தேதி 60 கிலோ கஞ்சா பிடிபட்ட வழக்கில் ஐந்து திருநங்கையர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.இதில், திருநங்கையரான பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அபர்ணா, 27; ஆனந்தி, 37; ரதி, 36; கண்ணகி நகரைச் சேர்ந்த அபி, 32, ஆகியோர், கஞ்சா தொழில் போட்டி காரணமாக சிம்மியை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்கில் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.