| ADDED : டிச 08, 2025 06:21 AM
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு குளியல் அறைகள், வாகன நிறுத்துமிடம், உணவக வசதியுடன், அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகள், மூன்றுஅடுக்கு அன்னதான கூடம், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடம் உட்பட, 86 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் கடந்த இரு மாதத்திற்கு முன் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் முருகன் மலைப்பாதை எதிரே உள்ள கார்த்திகேயன் குடில் பகுதியில், 30 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் இலவசமாக தங்கி செல்வதற்கு குளியல் அறை, கழிப்பறை வசதிகளுடன் அடுக்குமாடி கட்டடம், வாகன நிறுத்தம் மற்றும் உணவகம் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றி, பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது, கார்த்திகேயன் குடில் பகுதியில் மேற்கண்ட கட்டடம் மற்றும் வசதிகள் செய்து தருவதற்கு சேதமான தேவஸ்தான விடுதியின் அறைகள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. புதிய கட்டுமான பணிகள் ஒன்பது மாதத்திற்குள் முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.