உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முட்டுக்கட்டை! l நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு மின்வாரியம்... l மின்நிறுத்தம் செய்ய முடியாது என கைவிரிப்பு

முட்டுக்கட்டை! l நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு மின்வாரியம்... l மின்நிறுத்தம் செய்ய முடியாது என கைவிரிப்பு

திருத்தணி:

திருத்தணி நகராட்சியில் போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்புகளை தடுக்க நெடுஞ்சாலை துறையினர், 8.75 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால்வாய் பணிகள் கடந்தாண்டு முதல் மேற்கொண்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் பணிகளை முழுமையாக முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், புதிய மற்றும் பழைய சென்னை சாலை, சித்துார் சாலை, ம.பொ.சி., சாலை, அக்கைய்யநாயுடு சாலை, அரக்கோணம் சாலை ஆகிய இடங்களில் மொத்தம், 5 கி.மீ., நீளத்திற்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையை சிலர் ஆக்கிரமித்தும் வணிக வளாகங்கள் கட்டியும், கடைகள் வைத்து வியாபாரம் செய்வதாலும், பொதுமக்கள் கூட நடமாட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் கடந்தாண்டு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7.05 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலங்கள் அமைக்க தீர்மானித்து டெண்டர் விடப்பட்டது.தவிர கடந்த இரு மாதம் முன் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் அரக்கோணம் சாலையில் விரிவாக்கம் ஒரு சிறுபாலம் கட்டும் பணிகளும் டெண்டர் விடப்பட்டு பணி நடந்து வருகிறது.தற்போது வரை பழைய சென்னை சாலை, சித்துார் சாலை, ம.பொ.சி., சாலை, அக்கைய்யநாயுடு சாலை ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்கம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.அரக்கோணம் சாலை மற்றும் மேல்திருத்தணி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரிவாக்கம் செய்வதற்கு இடையூறாக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாக, 88 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை வேறுடன் அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறையினர் மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன் கடந்த ஒரு மாதம் முன் ஏலம் விடப்பட்டது. இந்த மரங்களை வெட்டுவதற்கு, மின்ஒயர்கள் மற்றும் மின்கம்பங்கள் இடையூறாக உள்ளதால் நெடுஞ்சாலை துறையினர் திருத்தணி மின்வாரிய அதிகாரிகளிடம் மரங்கள் வெட்டுவதற்கு மின்சப்ளை நிறுத்தம் செய்து தர வேண்டும் என கடிதம் அனுப்பினர். மேலும் பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று மின் நிறுத்தம் செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், மின்வாரிய அதிகாரிகள் இதுவரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுப்பிய கடிதம் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதால் சாலை விரிவாக்கம் பணிகள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள், நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை அதிகாரிக்கு, விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், மின்சப்ளை நிறுத்தம் செய்ய எங்களால் முடியாது. இது எங்களுக்கு மேல் அதிகாரிகள் உத்தரவு. ஆகையால், தற்போது மின்நிறுத்தம் செய்ய முடியாது என கடிதம் அனுப்பியுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் தினமும் ஒரு மணி நேரம் மரங்கள் அகற்றும் இடத்தில் மட்டும் மின்சப்ளை துண்டித்தால் போதும் என கூறியும் மின்வாரிய அதிகாரிகள் முடியாது என சமாளிக்கின்றனர். இதனால், தேர்தல் முடியும் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை