| ADDED : டிச 06, 2025 06:37 AM
திருவள்ளூர்:பூண்டியில் இருந்து புழல் செல்லும், கிருஷ்ணா கால்வாயில், மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால், குடிநீர் மாசடைந்து வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர், கொசஸ்தலை ஆறு நீர் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருகிறது. இங்கு சேகரமாகும் தண்ணீரை புழல் ஏரிக்கு கால்வாய் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு, பின் சென்னைக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பூண்டி-புழல் கால்வாய் வழியில் ஈக்காடு கிராமம் அமைந்துள்ளது. கால்வாய் ஓரம் வசித்து வரும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து, சமீபத்தில் பெய்த மழைநீர் மற்றும் கழிவுநீர், அங்குள்ள மேம்பாலத்தின் அருகில் கால்வாயில் கலக்கிறது. இதனால், சென்னை நகர மக்களுக்கு செல்லும் குடிநீர், கழிவு நீர் கலப்பதால் மாசடைந்து வருகிறது. எனவே, நீர்வள ஆதாரத் துறையினர், ஈக்காடு அருகில் மழைநீருடன் கலக்கும் கழிவுநீரை, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.