உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இட நெருக்கடியால் மாணவர்கள் தவிப்பு வலுக்கட்டாயமாக சேர்க்கை குறைப்பு

இட நெருக்கடியால் மாணவர்கள் தவிப்பு வலுக்கட்டாயமாக சேர்க்கை குறைப்பு

திருவொற்றியூர்:சென்னை, மணலிபுதுநகர் காவல் நிலையம் சாலையில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. 2017ம் ஆண்டு வரை, நடுநிலைப் பள்ளியாக செயல்பட்ட நிலையில், அதன்பின் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில், புதிய கட்டடம் கட்டப்படாததால், ஏற்கனவே துவக்கப் பள்ளி செயல்பட்டு வந்த வளாகத்திலேயே, எட்டு வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு, உயர்நிலைப் பள்ளி செயல்பட துவங்கியது.இதன் காரணமாக, 900 மாணவ - மாணவியர் படிக்கும் துவக்கப் பள்ளிக்கு, இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை வலுக்கட்டாயமாக குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்நிலையில், உயர்நிலைப் பள்ளிக்கும் போதுமான கட்டடம் இல்லாததால், மாணவர் சேர்க்கையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, 6 - 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளியில், 495 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். 15 வகுப்பறைகள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது, 10 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதனால், கடும் இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.மேலும், இப்பள்ளியில் கற்பித்தல் முறை சிறப்பாக இருப்பதால், மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இடப்பற்றாக்குறையால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை சேர்க்க முன்வரவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர்களின் எதிர்காலத்தை உணர்ந்து, உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர முன்வர வேண்டும்.இல்லாவிட்டால், உயர்நிலைப் பள்ளிக்கு, புதிய வளாகத்தில் வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கட்டடம் கட்டுவதற்கு மணலிபுதுநகரில், பிளாக், 58, 84, 85 ஆகிய இடங்களில் போதுமான இடம் உள்ளது.மேலும், மற்றொரு அரசு பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு திடலும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, கல்வி துறை அதிகாரிகள் பார்வையிட்டு, புதிய பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள் கட்ட இடம் தேர்வு செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை