| ADDED : பிப் 16, 2024 10:03 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று மாசி மாதம் கிருத்திகை விழா ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு உற்சவர் முருகபெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.காலை 10:00 மணிக்கு உற்சவர் வெள்ளி சூரிய பிரபை வாகனத்திலும், இரவு, 7:00 மணிக்கு பூத வாகனத்திலும் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.வெள்ளிமயில் வாகனத்தில் உற்சவர் முருகர் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். பொது வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். நுாறு ரூபாய் சிறப்பு தரிசனத்தில் பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.lராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே அமைந்துள்ளது கரிக்கல் குமரகிரி முருகர் மலைக்கோவில். மாசி மாத கிருத்திகையை ஒட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமான், மலைக்கோவிலில் உள்புறப்பாடு எழுந்தருளினார். இதில், சோளிங்கர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் செங்கல்வராய சுவாமி மலைக்கோவில் மற்றும் அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலைக்கோவில்களிலும் நேற்று மாசி மாத கிருத்திகை உற்சவம் நடந்தது.l சோளிங்கர் பெரிய மலையில் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாக இந்த தலம் விளங்குகிறது. யோக நரசிம்மருக்கு எதிரே சின்னமலையில், யோக அனுமன் அருள்பாலிக்கிறார்.யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. பக்தோசித பெருமாள் கோவிலில் நேற்று ரத சப்தமி உற்சவம் நடந்தது. காலையில், சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய பக்தோசித பெருமாள், மாலை சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் உடன் வலம் வந்தனர்.