| ADDED : பிப் 22, 2024 01:16 AM
பழவேற்காடு:பழவேற்காடு ஏரியில், கடந்த, 2011ல், படகு சவாரி சென்ற சுற்றுலா பயணியர், 22 பேர் படகு கவிழ்ந்து, நீரில் மூழ்கி இறந்தனர். இதை தொடர்ந்து, அங்கு படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி ஏரியில் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து வருகின்றனர். ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரப்பகுதிக்கு செல்பவர்கள் அங்கு ஆபத்தான செய்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வப்போது உயிரிழப்புகளும் தொடர்கின்றன.சமீப காலமாக இளைஞர்கள் படகு சவாரி செய்து, தீவுப்பகுதிகளில் இரவு முழுதும் தங்கி உல்லாசமாக இருந்துவிட்டு மறுநாள் திரும்புகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன.இந்நிலையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், அனைத்து மீனவ கிராம நிர்வாகிகளுக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில் உள்ளதாவது:பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியரை பகல் மற்றும் இரவு நேரங்களில் படகு சவாரிக்கு அழைத்து செல்லப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.மீனவர்கள் சுற்றுலா பயணியரை படகு சவாரிக்கு அழைத்து செல்ல வேண்டாம். யாரேனும் மீறி அழைத்து செல்வது தெரிய வந்தால், அந்த படகின் பதிவு மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும். படகும் பறிமுதல் செய்து நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் உள்ளது.