| ADDED : பிப் 17, 2024 11:24 PM
திருவள்ளூர், கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நீண்ட கால கடனை திருப்பி செலுத்த, சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சண்முகவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வேளாண் சங்கம் மற்றும் வங்கிகளில் நிலுவையில் உள்ள, நீண்ட கால கடன்களை வசூலிக்க, 'சிறப்பு கடன் தீர்வு திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த, 2022 டிச.,31ம் தேதியில் கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு நிறைவடைந்த கடன்தாரர், நிலுவைத் தொகையில், 25 சதவீதத்தை 2023 டிச.,13, முதல் மூன்று மாதத்திற்குள் செலுத்தி, வங்கி அல்லது சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.மீதமுள்ள 75 சதவீத தொகையை அன்றிலிருந்து, 6 மாத காலத்திற்குள் 6 தவணை வாயிலாக செலுத்த வேண்டும். கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் முடிய அசலுக்கு 9 சதவீத சாதாரண வட்டியாக மாற்றி வட்டி குறைத்து வசூலிக்கப்படும்.கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இச்சலுகையை பயன்படுத்தி, நீண்டகால நிலுவையுள்ள கடன்களை திரும்ப செலுத்தி பயன்பெறலாம். இதன் வாயிலாக, 7 ஆயிரத்து 504 பயனாளிகளுக்கு, 36.21 கோடி ரூபாய் வட்டி சலுகை கிடைக்கும். இத்திட்டம், வரும், செப்.,30 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.