| ADDED : ஆக 23, 2011 01:51 AM
பொன்னேரி : கடல் வழியாக அன்னிய சக்திகளின் ஊடுருவலைத் தடுக்க மீனவர்கள்
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில்,
மாவட்ட எஸ்.பி., வனிதா பேசினார்.கடலோர கிராமங்கள் வழியாக சமூக விரோதிகள்
மற்றும் அன்னிய சக்திகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக, மீனவ மக்களிடையே
விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.திருவள்ளூர் மாவட்டம்,
பழவேற்காடு மீனவப் பகுதியில் லைட்-அவுஸ் குப்பம், கூனங்குப்பம், அரங்கம்
உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன.நேற்று, அப்பகுதி மீனவ மக்களிடையே,
கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம், பொன்னேரி டி.எஸ்.பி.,
ஜெகதீஸ்வரன் தலைமையில் நடந்தது.மாவட்ட எஸ்.பி., வனிதா சிறப்பு அழைப்பாளராக
பங்கேற்று, மீனவ மக்களிடையே பேசுகையில், ''தமிழகத்தில் பயங்கரவாத
அச்சுறுத்தல்கள் இல்லையெனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடல் வழியாக அன்னிய சக்திகள் மற்றும் பயங்கரவாத
செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதாக ஊடுருவ வாய்ப்புள்ளது. எப்போதும் கடலில்
இருக்கும் மீனவர்களாகிய உங்களால், எளிதில் அவர்களை அடையாளம் காண
முடியும்.கடலில் புதியவர்களின் நடமாட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்தால்
எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள். இது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும்
உதவியாக இருக்கும். அதேபோல், முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள் கொண்டுவரும்
பொருட்களை யாரும் வாங்க வேண்டாம். அதில் கடத்தல் மற்றும் வெடிபொருட்கள் கூட
இருக்கலாம்.பழவேற்காட்டில் கடலோர காவல்படை அமைக்கவும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீனவர்கள் விழிப்போடு இருந்து நாட்டு
பாதுகாப்பிற்கு உதவி செய்ய வேண்டும்'' என்று கூறினார்.