| ADDED : ஆக 01, 2024 10:53 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தைச் சேர்ந்த மணி பாலகுமார், 41, திருநெல்வேலி பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூமில் புதிய கார் வாங்கியுள்ளார். சில மாதங்களுக்கு பின்னர் சர்வீஸ் செய்த நிலையில், இஞ்சின் ஆயில் அளவைக் காட்டும் பகுதியில் எச்சரிக்கை விளக்கு எரிந்துள்ளது.இது குறித்து கார் விற்பனையாளரிடம் கேட்டதற்கு, அது தானாகவே அணைந்து விடும் எனக், கூறியுள்ளனர். ஆனால், திடீரென காரின் இன்ஜின் முழுமையாக பழுதாகி நின்று விட்டது. வாங்கிய ஓராண்டிற்குள் முற்றிலும் பழுதானதால் புதிய கார் தருமாறு ஷோரூமில் மணி பாலகுமார் கேட்டுள்ளார்.கார் விற்பனையாளர் அதற்கு சம்மதிக்காததால், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.பழுதான காருக்கு பதில் புதிய கார் அல்லது கார் விலையான, 12 லட்சம் ரூபாய், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு, 50,000 ரூபாய், வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாய் ஆகியவற்றை இரு மாதங்களுக்குள் வழங்க, அவர்கள் உத்தரவிட்டனர்.