உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 7 ஆண்டாக சம்பளம் இன்றி பணி கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா

7 ஆண்டாக சம்பளம் இன்றி பணி கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி பஞ்., பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி, 51. இவர், கடந்த 2001 முதல், 2007 வரை வரதம்பட்டி பஞ்சாயத்து நுாலகத்தில் பொறுப்பாளராக வேலை பார்த்துள்ளார். அப்போதையை கலெக்டர் ராஜாராம் மாதம் 700 ரூபாய் என்ற குறைவான ஊதியத்தில் பரமேஸ்வரிக்கு வேலை வழங்கி உள்ளார். இந்நிலையில், பரமேஸ்வரியை பணி நிரந்தரம் செய்யாமல் வேறு ஒரு நபரை அந்த பதவிக்கு அதிகாரிகள் நியமனம் செய்துள்ளனர். மேலும், பரமேஸ்வரி வேலை பார்த்த ஏழு ஆண்டுகளுக்கான சம்பளமும் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட பரமேஸ்வரி நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென அவர், கலெக்டர் அறை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், பரமேஸ்வரியை அங்கிருந்து வெளியேற்றினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பரமேஸ்வரி கூறியதாவது:ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்ததற்கான ஊதியத்தை கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறேன். பணம் இல்லாதாதல் பழைய புடைவை ஒன்றை 30 ரூபாய்க்கு விற்று பஸ்சில் கலெக்டர் அலுவலகம் வந்தேன். எனக்கு ஏழு ஆண்டுக்கான ஊதியமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி