| ADDED : மே 31, 2024 02:00 AM
அனுப்பர்பாளையம்;திருப்பூரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.திருப்பூரில் 2014ம் ஆண்டு மாநகர போலீஸ் ஆணையரகம் உருவாக்கப்பட்டது.அதன் அலுவலகம் சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் திருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., பஸ் நிறுத்தம் அருகே உள்ள கதர் வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழா காண தயாராக உள்ளது.போலீசார் கூறியதாவது:தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில், 2.24 ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ 15 கோடி ரூபாய் மதிப்பில் இந்த 5 மாடி கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.ஒரு மாநகர காவல் ஆணையர், 3 துணை ஆணையர்கள், மாநகர காவல் ஆணையத்தின் நிர்வாக அலுவலகம், உதவி ஆணைய கட்டுப்பாட்டு அலுவலகம், சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்ற பிரிவு உட்பட பல்வேறு அலுவலகங்கள் ஒரே குடையின் கீழ் புதிய அலுவலகத்தில் செயல்பட உள்ளன.தேர்தல் நடத்தை விதிகளால் தற்போது கட்டடம் திறப்பு விழாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் விரைவில் திறக்கப்பட்டு செயல்பாட்டு வரும். இவ்வாறு, போலீசார் கூறினர்.