| ADDED : ஜூலை 29, 2024 11:15 PM
திருப்பூர்:திருப்பூரின் காவல் தெய்வம் என்று போற்றப்படும், ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில், நொய்யல் கரையோரம் அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, ஆடிக்குண்டம் திருவிழா நடந்து வருகிறது; இன்று அதிகாலை, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.கோவிலுக்கு சொந்தமான நிலம், ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அவற்றை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதற்கு பிறகும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று, நேற்று முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழர் சமூக முன்னேற்ற கழக நிறுவனர் மலர்விழி கூறியதாவது:செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது; அவற்றை மீட்க வேண்டுமென மனு கொடுத்தும், தக்கார் வளர்மதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆடிக்குண்டம் திருவிழா நடந்து வரும் நிலையில், அம்மனுக்கு பக்தர்கள் அளித்த, மூன்று பவுன் திருமாங்கல்யம், தக்கார் வசம் இருக்கிறது.திருக்கல்யாண உற்சவத்துக்கு, திருமாங்கல்யத்தை வழங்காமல் மறுத்து விட்டார். கோவில் விழாக்கள் பாரம்பரிய வழக்கப்படி நடக்க, தக்காருக்கு உத்தரவிட வேண்டுமென, முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.