உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொட்டை அடிக்க ரூ.ஆயிரம் வசூல் பல்லடத்தில் பக்தர்கள் அதிர்ச்சி

மொட்டை அடிக்க ரூ.ஆயிரம் வசூல் பல்லடத்தில் பக்தர்கள் அதிர்ச்சி

பல்லடம்;பல்லடம் அங்காளம்மன் கோவிலில், குழந்தைக்கு முடி காணிக்கைக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அறநிலையத்துறை அதிகாரி போலி ரசீது என மறுத்துள்ளார்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமாக பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. நேற்று பல்லடத்தைச் சேர்ந்த விஜயகுமார் குடும்பத்தினர், தங்கள் குழந்தைக்கு, கோவிலில் முடி காணிக்கை கொடுத்துள்ளனர். இதற்காக, 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அங்காளம்மன் கோவில் பெயர், முகவரியுடன் கூடிய ரசீதில், மொட்டை வரவு ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டு, ரசீது வழங்கப்பட்டுள்ளது. இதில், 'அறங்காவலர், அங்காளம்மன் கோவில்' என்ற முத்திரையும் உள்ளது.விஜயகுமார் குடும்பத்தினர் கூறுகையில், 'பழநி, திருச்செந்துார் என பிரசித்தி பெற்ற கோவில்களில் கூட பணம் வசூலிப்பதில்லை. ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது தொடர்பாக கேட்டதற்கு நிர்வாக கமிட்டியில் கேளுங்கள் என்றனர். பக்தர்களிடம் வசூலிக்கப்படும் தொகை, முறையாக அறநிலையை துறைக்குத்தான் செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

போலி ரசீது என்கிறார் செயல் அலுவலர்

கோவில் செயல் அலுவலர் ராமசாமியிடம் கேட்டதற்கு, ''அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முடி காணிக்கைக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. இவ்வாறு ரசீது வழங்கினாலும், அது, கணினி ரசீதாக மட்டுமே இருக்கும். ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ள ரசீது போலியானதாக இருக்கலாம். அவ்வாறு, போலியாக வசூலிக்கப்பட்டு இருந்தால் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை