| ADDED : மே 23, 2024 11:29 PM
உடுமலை;சிதிலமடைந்துள்ள எலையமுத்துார் பிரிவு பஸ் ஸ்டாப் நிழற்கூரையை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலையிலிருந்து போடிபட்டி, குரல்குட்டை, அமராவதி, திருமூர்த்தி, மறையூர், மூணார் வரை செல்லும் பஸ்கள் அனைத்தும், தளிரோடு வழியாக செல்கின்றன.நகரின் எல்லையாக இருக்கும், எலையமுத்துார் பிரிவு ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பை, தினமும், 500க்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து, அரசுகலைக்கல்லுாரிக்கு வந்து செல்லும் மாணவர்களும் இதையே பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை முறையாக இல்லை.பஸ் நிறுத்தம் ஒரு பக்கமாகவும், நிழற்கூரை ஒரு பக்கமாகவும் உள்ளது. அதிலும், நிழற்கூரை ரோட்டிலிருந்து மிகவும் உள்வாங்கி, கழிவுநீர் பள்ளத்துக்கு பின் உள்ளது. இதை பயன்படுத்த பயணியர் பள்ளத்தை கடந்து செல்ல வேண்டும்.அவர்கள் ரோட்டிற்கு வருவதற்குள், பஸ் சென்றுவிடும் என்ற நிலையில் தான் தற்போதைய நிழற்கூரை அமைந்துள்ளது. அதுவும் மிகவும் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது.பொதுமக்களுக்கு பயன்படாமல் இருப்பதால், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் இதை பயன்படுத்துகின்றனர்.இதனால் பயணியர் அங்கு காத்திருக்கவும் அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு பயனில்லாத, சிதிலமடைந்த நிழற்கூரையை அப்புறப்படுத்தி, முறையாக பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்கூரை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.