உடுமலை:தொடர் மழை காரணமாக, உடுமலை உழவர்சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, கிலோவுக்கு ரூ 5 முதல் 10 வரை விலை உயர்ந்துள்ளது.உடுமலை உழவர்சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம் பகுதி சுற்றுப்புற கிராமங்களில் காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது.விளையும் பொருட்களை உடுமலை உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த வாரம், உடுமலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தக்காளி, பீர்க்கங்காய், சுரைக்காய், உள்ளிட்ட பந்தல் காய்கறி சாகுபடி பாதித்தது. இதனால், காய்கறிகள் பறிக்க முடியாமலும், காய்ப்பிடிப்பு இல்லாமலும், அழுகியும் உற்பத்தி பாதித்துள்ளது.இதன் காரணமாக, காய்கறிகளின் விலை கிலோவுக்கு சராசரியாக 5 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.உடுமலை உழவர்சந்தையில், நேற்று தக்காளி விலை, கிலோ ரூ.40 முதல் 45 வரையும், உருளைக்கிழங்கு, 60 - 65 வரையும், சின்னவெங்காயம், 50 - 65 வரையும், பெரியவெங்காயம், 35 - 40 வரையும், மிளகாய், 70 - 80 வரையும், கத்தரிக்காய், 40 - 45 வரையும், வெண்டைக்காய், 45 - 50 வரையும்,முருங்கைக்காய், 45 - 50 வரையும், பீர்க்கங்காய், 65 - 70 வரையும், சுரைக்காய், 20 - 25 வரையும், புடலங்காய், 35 - 40 வரையும், பாகற்காய், 65 - 70 வரையும், தேங்காய், 30 - 36 வரையும், முள்ளங்கி, 30 - 35 வரையும், பீன்ஸ், 200 - 210 வரையும், கேரட், 65 - 70, வாழைப்பழம் 40 - 50 ரூபாய்க்கும் விற்பனையானது.