திருப்பூர்:'தமிழகத்தில், பயிர் சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்து வருகிறது; விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என வேளாண் துறையினர் கூறுகின்றனர்.தமிழகத்தில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சில ஆண்டுகளாக அனைத்து பயிர்களின் சாகுபடி பரப்பும் குறைந்து வருகிறது என, வேளாண் துறையினரே கூறுகின்றனர்.வேளாண், தோட்டக்கலை துறையினர் சிலர் கூறியதாவது:நம் மாநிலத்தின் முக்கிய பயிரான நெல், கடந்த, 2001 - 2002ல், 50 லட்சம் ஏக்கரில் எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளில், (2011 - 2012) இது, 47 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதேபோல், சோளம்சாகுபடி பரப்பும், 7.83 லட்சம் ஏக்கரில் இருந்து, 4.89 லட்சம் ஏக்கரில் குறைந்திருக்கிறது என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதேபோன்று முக்கிய பயிர்கள், சிறுதானியங்கள் என அனைத்து பயிர்களின் சாகுபடி பரப்பும் குறைந்திருப்பதாக, எங்களின் கள அனுபவம் உணர்த்துகிறது. மாநிலத்தின் முக்கிய உணவுப்பயிர் சாகுபடி செய்யும் பரப்பளவு, கடந்த, 10 ஆண்டில் கணிசமாக குறைந்திருக்கிறது என்பது, எதிர்கால உணவு பஞ்சத்துக்கான அறிகுறி என்றும் சொல்லலாம்.மாநிலத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், குறிப்பிட்ட பயிர் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, வட்டார அளவில் வருவாய் துறை, வேளாண், தோட்டக்கலை துறையினரை இணைத்து சாகுபடி பரப்பளவை கணக்கிட வேண்டும். சாகுபடி பரப்பு குறைந்திருந்தால் அதற்கான காரணம், தீர்வு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.