| ADDED : ஆக 02, 2024 11:21 PM
திருப்பூர்:இறக்குமதி நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், சுற்றுச்சூழலுக்கு மாசற்ற ஆடை தயாரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள், திருப்பூர் உட்பட ஏழு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஜவுளி இறக்குமதி நாடுகள், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில், ஆடை தயாரிக்கப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை பின்பற்றி வருகின்றன. இதற்கேற்ப ஜவுளி ஏற்றுமதி நாடுகளும், உற்பத்தி படிநிலைகளில், பல்வேறு மாற்றங்களை புகுத்த தயாராக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.மத்திய ஜவுளி அமைச்சகத்தின் அங்கமான ஏ.எம்.ெஹச்.எஸ்.எஸ்.சி., எனப்படும் ஆயத்த ஆடை, அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில், திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது.ஏ.எம்.ஹெச்.எஸ்.எஸ்.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:இறக்குமதி நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ஆயத்த ஆடைத்துறையில் நிலைத்தன்மை நடைமுறை மேம்படுத்தும் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, திருப்பூர், பெங்களூரு, உட்பட ஏழு தொழில் நகரங்களில், சிறப்பு விளக்க கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம்.மேற்கத்திய நாடான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'புளூசைன்' நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த கருத்தரங்குகள், வெளிநாட்டு வர்த்தகர்கள் எதிர்பார்க்கும் உற்பத்தி நிலைத்தன்மையை, இந்தியாவில் கட்டமைக்க உதவியாக இருக்கும்.திருப்பூரில் நடைபெற உள்ள கருத்தரங்கில், புளூசைன் டெக்னாலஜி இயக்குனர் கத்தரீனா வெரினா மேயர் பங்கேற்று, ஐரோப்பிய நாடுகளின் எதிர்பார்ப்புகள் குறித்து பேசுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.