| ADDED : ஜூன் 26, 2024 01:16 AM
பல்லடம்;ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க ஆட்சேபம் தெரிவித்து, பல்லடம் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பல்லடம் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம், பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். பி.டி.ஓ., கனகராஜ் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.கூட்ட விவாத தொகுப்பு பின் வருமாறு:ராஜேந்திரன் (மாவட்ட கவுன்சிலர்): கரைப்புதுார் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மேல்நிலைப் படிப்புக்காக, அக்கம் பக்கத்தில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்றால் அங்கு இடமில்லை என்கின்றனர்.எனவே, கரைப்புதுார் பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.தேன்மொழி (ஒன்றிய தலைவர்): மாநகராட்சியுடன் ஊராட்சி பகுதிகளை இணைப்பதால், அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்காது என்றும், வரி இனங்கள் உயரும் எனவும் மக்கள் கருதுகின்றனர். எனவே, மக்களிடம் கருத்து கேட்ட பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.ரவிச்சந்திரன் (ம.தி.மு.க.,): அருள்புரம்- - உப்பிலிபாளையம் ரோட்டில், ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்.லோகநாதன் (சுகாதார துறை ஆய்வாளர்): மழை பெய்யும் போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குளோரினேசன் செய்யும் தண்ணீரை பொதுமக்கள் தவிர்க்கின்றனர். இது குறித்து ஊராட்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு விவாதங்களுக்கு பின், ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.