திருப்பூர்,;கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், சீருடை தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 2.40 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் உள்ளனர். அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு; ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு; 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, மூன்று வகை வண்ணங்களில், சீருடைகள் வழங்கப்படுகிறது.அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சீருடை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தாலும் கூட, பள்ளி துவங்கும் நாளில், புதிய சீருடையுடன் செல்வதையே மாணவர்கள் விரும்புகின்றனர். அதற்காகவே, கடையில் துணி எடுத்து, சீருடை தைக்கின்றனர்.தனியார் பள்ளிகளில், அடிக்கடி சீருடைகளை மாற்றுகின்றனர். பள்ளி நிர்வாகமே, மொத்தமாக கொள்முதல் செய்து,தலா இரண்டு செட் சீருடையை தைத்தும் கொடுக்கின்றன. தனியார் பள்ளிகளின் சீருடைக்கான துணிகள், முன்னணி ஜவுளிக்கடைகளில் கிடைக்கிறது. பள்ளி சீசன் விற்பனை
திருப்பூரை பொறுத்தவரை, மே - ஜூன் மாதங்களில், சீருடை வியாபாரம் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு கடைகளிலும், சீருடை துணி மற்றும் ஆடை விற்பனை, பெல்ட், ஷூ மற்றும் ஷாக்ஸ் விற்பனை களைகட்டியிருக்கிறது. 'ஸ்டேஷனரி கடைகளில், நோட்டு, புத்தகம், பென்சில் பாக்ஸ், ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.ஆண்டு விற்பனை என்ற வகையில், ஸ்கூல் பேக் மற்றும் 'லஞ்ச்' பேக் விற்பனை, ரோட்டோர கடைகளில் துவங்கி, 'பிராண் டட்' கடை வரை, கூட்டம் களைகட்டியிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவியருக்கான சீருடை, காலணிகள், பெல்ட், ஸ்கூல் பேக், 'லஞ்ச்' பேக் விற்பனை, ஒவ்வொரு ஆண்டும் களைகட்டிக்கொண்டிருக்கும். மேல்நிலை பள்ளி படிப்பை முடித்து, உயர்கல்விக்கு பலரும் செல்கின்றனர்.அதேபோல், ஆரம்ப கல்வியில் பல்லாயிரக்கணக்கானோர் காலடி எடுத்து வைக்கின்றனர். சிலர், உயர்கல்விக்கு உயர்கின்றனர்; சிலர் மேல்நிலை கல்விக்கு மாறுகின்றனர். ஒவ்வொரு கட்டமாக மாறும் போது, சீருடை, காலணி என, மிடுக்காக பள்ளிக்கு சென்று வருவதையே பெற்றோரும் விரும்புகின்றனர்.அந்த வகையில், ஜூன் மாதம் பிறந்த பிறகு, திருப் பூரில் இயங்கும் ஜவுளிக்கடைகள் பரபரப்பாக மாறிவிட்டன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஜவுளிக்கடைகளில் சீருடை விற்பனை மட்டும் களை கட்டியிருந்தது.