உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முடிவுக்கு வராத தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணி நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

முடிவுக்கு வராத தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணி நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

உடுமலை;உடுமலை தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணி, நான்கு ஆண்டாக முழுமையடையாமல் இழுபறியாகி வருகிறது.உடுமலை தங்கம்மாள் ஓடை, ஏழு குளங்களின் உபரி நீர் மற்றும் மழை வெள்ள நீர் ஓடையாகவும், ஒட்டுக்குளத்திலிருந்து, உடுமலை நகரம் வழியாக, ராஜவாய்க்கால் பள்ளத்தில் இணைந்து, உப்பாறு ஓடையுடன் கலக்கிறது.நகர பகுதியில், தங்கம்மாள் ஓடையை ஆக்கிரமித்து, ஏராளமான வீடுகள் அமைந்திருந்தன. அதோடு, பொள்ளாச்சி ரோட்டையும், தளி ரோடு, குட்டைத்திடல் பகுதியை இணைக்கும் பிரதான வழித்தடமாகவும் இருந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், 10 ஆண்டுக்கு முன், ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன.தொடர்ந்து, மத்திய அரசு நிதிக்குழு மானியத்திட்டம் மற்றும் நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், ரூ.13.45 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கின.பொள்ளாச்சி ரோடு சந்திப்பு முதல் தலைகொண்டம்மன் கோவில் வரை, 300 மீட்டர் நீளத்திற்கு ரோடு அகலப்படுத்தும் பணியும், வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில், ஒட்டுக்குளம் முதல் நகர எல்லை வரை ஓடை கரையில், வெள்ளத்தடுப்புச்சுவர் கட்டும் பணி துவங்கியது.ஆனால், முழுமையாக ஓடையின் நீர் வழித்தடம் மீட்கப்படாமல், பெயரளவிற்கு பணி மேற்கொள்ளப்பட்டது. ஓடை அகலம் அதிகமாக இருக்கும் நிலையில், நீர் வழித்தடத்தை குறுக்கியும், நேராக அமைக்காமல் வளைவுகளுடனும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.அதோடு, ஓடை துார்வாரப்பட்ட மண், ஓடையில் தேங்கியுள்ள மண், பிளாஸ்டிக் கழிவுகளை முழுமையாக அகற்றப்படவில்லை.தங்கம்மாள் ஓடையில் ஒரு சில பகுதிகளில் மட்டும், வெள்ள தடுப்பு சுவர்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பாலங்கள் அமைக்கப்பட்டன.ஆனால், நீர் செல்லும் வழித்தடத்தில் தளம் கான்கிரீட் அமைத்தல், முறையாக கழிவு நீர் வெளியேறும் வகையில், துார்வாரி நில மட்டத்தை சரி செய்தல், ரோடு அகலப்படுத்துதல் மற்றும் ரோடு விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படவில்லை.ரோட்டோரம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழலும் உள்ளது.கான்கிரீட் தளம் அமைக்காமலும், மண், கழிவு அகற்றப்படாமல் ஓடையின் நீர் வழித்தடம் மறிக்கப்பட்டும், புதர் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது. சாக்கடை கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது.தற்போது பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்பும், வழியோரத்திலுள்ள வீடுகளுக்குள் புகும் அபாயமும் உள்ளது. மேலும், இந்த ரோட்டில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.எனவே, தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணிகளை, திட்ட வடிவமைப்பு அடிப்படையில், முழுமையாக மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ