உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தண்ணீரின் அருமை உணர மறந்தோம்

தண்ணீரின் அருமை உணர மறந்தோம்

''திருப்பூர் மாவட்டத்தில் தண்ணீர் 'தரித்திர நிலை' உருவாகியிருக்கிறது; ஆனால், இதைப் பலரும் உணர மறந்துவிட்டோம்'' என்று கூறுகிறார், 'எக்ஸ்னோரா பவுண்டேஷன்' தலைவர் செந்துார் பாரி.அவிநாசியில் நடந்த பசுமைக் கருத்தரங்கில், அவரது உரை:உலகளவில் மிகப்பெரிய பிரச்னை தண்ணீர் தான். தமிழகத்தில் உள்ள இந்திய நிலப்பரப்பு, 4 சதவீதம்; 7 சதவீதம் அளவுக்கு மக்கள் வசிக்கின்றனர். ஆனால், 2.50 சதவீதம் தான் தண்ணீர் உள்ளது. நீர் சேமிப்பில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.

மூன்றில் ஒரு பங்குநீர்நிலை மாயம்

கடந்த, 30 ஆண்டுகளில், மூன்றில் ஒரு பங்கு நீர் நிலைகளை நாம் இழந்திருக்கிறோம். நீர்நிலைகளை அதிகம் இழந்த மாநிலங்களில், தமிழகம் 'நம்பர் ஒன்' என்றும் சொல்லலாம்.கடந்தாண்டு, முதன்முறையாக இந்தியாவில் உள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை ஒரு அமைப்பினர் நடத்தினர்.அதில், நம் நாட்டில், 24 லட்சத்து 24 ஆயிரத்து 540 நீர்நிலைகள் உள்ளன என, கணக்கிட்டுள்ளனர். இதில், தமிழகத்தில், ஒரு லட்சத்து ஏழு ஆயிரம் நீர்நிலைகள் உள்ளன; அதில், 52 ஆயிரம் நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லை.உலகளவில், அதிகளவு நிலத்தடி நீரை பயன்படுத்துகிற நாடாக, இந்தியா உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 30 பிர்காவில், ஒரு பிர்கா தவிர, மற்ற அனைத்து பிர்காவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது; தண்ணீர் தரித்திர நிலை என்கிறோம். மழையை நாம் சரியாக பயன்படுத்தவில்லை; மழைநீரை சேமிக்கவில்லை.தமிழகத்தில், 72 சதவீதம் நிலம், பாறைப்பகுதி; எனவே, அதில் விழுகிற தண்ணீர் ஓடிவிடும்.மக்கள் தங்கள் பகுதியில் ரோடு சரியில்லை; தெரு விளக்கு எரிவதில்லை என்றெல்லாம் கேட்கின்றனர்.ஆனால், தண்ணீர் பற்றாக்குறை குறித்து பேசுவதில்லை; குழாய் வழியாக தண்ணீர் வருவதால், தண்ணீரின் அருமை அவர்களுக்கு தெரிவதில்லை.தண்ணீரை உருவாக்க முடியாது; மாறாக, நிர்வகிக்க முடியும். மக்கள் பங்கேற்புடன் நீர் மேலாண்மை செய்ய வேண்டும். இந்த சமூக செயல்பாடு, இயக்கமாக மாற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தண்ணீரை உருவாக்க முடியாது; மாறாக, நிர்வகிக்க முடியும். மக்கள் பங்கேற்புடன் நீர் மேலாண்மை செய்ய வேண்டும். இந்த சமூக செயல்பாடு, இயக்கமாக மாற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை