| ADDED : ஜூன் 18, 2024 11:42 PM
பல்லடம்:பல்லடம் வட்டார பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என, சமீபத்தில் நடந்த நோயாளிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் பேசிய தலைமை மருத்துவர் ராமசாமி, 'ஐந்து ஏக்கரில் நிலம் இருந்தால், புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை கட்டித்தர தன்னார்வலர்கள் தயாராக இருப்பதை,' சுட்டிக்காட்டினார். ஆனால், வருவாய்த்துறை இதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்யுமா? என்ற கேள்வியும் எழுப்பினார்.தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால், வாகன போக்குவரத்துக் இடையே நோயாளிகள், ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதில் இடையூறு உள்ளது. எதிர்காலத்தில், இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், மாற்று இடத்தில் மருத்துவமனையை அமைப்பதே உகந்தது.இதுதவிர, இங்குள்ள கட்டடங்கள் மிகவும் பழமையுடன், மோசமான நிலையில் தான் உள்ளன. இவற்றை இடித்து அகற்றி மீண்டும் புதிய கட்டடம் கட்டுவதானால், அதுவரை மாற்று இடத்தில் மருத்துவமனையை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு, புதிய இடத்தில் அரசு மருத்துவமனையை அமைப்பது, எதிர்காலத்தில் மிகவும் பயனளிக்கும்.அரசு கட்டுப்பாட்டில் எத்தனையோ நிலங்கள் இருக்க, ஐந்து ஏக்கர் நிலத்தை, அரசு மருத்துவமனைக்காக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டால், பல்லடத்துக்கு, புதிய மருத்துவமனை கட்டடம் அமையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.