உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூன்றாம் தவணை புரூசெல்லோசிஸ் தடுப்பூசி 2,600 கன்றுகளுக்கு இலக்கு

மூன்றாம் தவணை புரூசெல்லோசிஸ் தடுப்பூசி 2,600 கன்றுகளுக்கு இலக்கு

உடுமலை:உடுமலை கோட்டத்தில், 2,600 கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், புரூசெல்லோசிஸ் மூன்றாவது தவணை தடுப்பூசி, கால்நடைகளுக்கு நேற்று முதல் செலுத்தப்படுகிறது.புரூசெல்லோசிஸ் என்கிற நோய், பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஏற்படுத்துகிறது. புரூசெல்லா அபார்டஸ் என்கிற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது.நோய் பாதித்த கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சல், கருச்சிதைவு உருவாகிறது. நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் சினை பிடிப்பதில் சிக்கல் காரணமாக, பால் உற்பத்தி குறைந்து, கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.இந்த நோய் தாக்கிய கால்நடையின் நஞ்சுக்கொடியை கையாளும்பட்சத்தில், மனிதர்களுக்கும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.புரூசெல்லோசிஸ் கருச்சிதைவு நோயை தடுக்க, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் வாயிலாக, கால்நடைகளுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 4 மாதம் முதல் 8 மாதமான கிடாரி கன்றுகளுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தும் முகாம், நேற்று துவங்கிய நிலையில் மார்ச் 15 வரை நடத்தப்படுகிறது.புரூசெல்லோசிஸ் தடுப்பூசி, கால்நடை நிலையங்கள் வாயிலாக நடைபெறும் முகாம்களில், இலவசமாக செலுத்தப்படும். காளைக்கன்றுகள், சினை மாடுகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கால்நடை உதவி இயக்குனர் ஜெயராம் கூறுகையில், 'உடுமலை கோட்டத்தில், ஓரிரு தினங்களில் துவங்கும் முகாம், ஒரு மாதம் வரை நடத்தப்படும். உடுமலை கோட்டத்தில், 2,600 கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை