| ADDED : பிப் 14, 2024 11:35 PM
திருப்பூர் : பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை, வாழை இலையில் மட்டுமே பார்சல் செய்யவேண்டும் என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள், சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பேசியதாவது:ஓட்டல், உணவகங்களில், பஜ்ஜி, போண்டா உள்பட தின்பண்டங்களை, ஈக்கள் மொய்க்காதவாறு மூடிவைத்து விற்பனை செய்ய வேண்டும். எண்ணெய் பண்டங்களை செய்தித்தாள்களில் வைத்து, உண்பதற்காகவோ அல்லது பார்சல் செய்து கொடுப்பதை தவிர்க்கவேண்டும். வாழை இலையில் மட்டுமே பார்சல் செய்யவேண்டும்.ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சுத்தமான இடத்தில், சுகாதாரமான முறையில் உணவு பண்டங்கள் தயார் செய்யவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்கள் நடத்தப்பட்ட ஆய்வில், பஜ்ஜி, போண்டா பார்சல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 192 கிலோ செய்தித்தாள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.உணவுப்பொருளின் தரம் சார்ந்த புகார்களை, 94440 42322 என்கிற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது tnfood safety consumer app என்கிற செயலியில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தாத சிறந்த பத்து உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.