உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊழலுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும் :அனைத்திந்திய மாதர் சங்கம் அறைகூவல்

ஊழலுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும் :அனைத்திந்திய மாதர் சங்கம் அறைகூவல்

திருப்பூர் : 'ஊழலுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும்' என, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் சுபாஷினி அலி பேசினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது தமிழ் மாநில மாநாடு, திருப்பூரில் மூன்று நாட்கள் நடந்தது. இதன் நிறைவாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் சுபாஷினி அலி பேசியதாவது: தமிழக மக்கள் பணத்துக்கும், பொருளுக்கும் ஓட்டு போடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் உண்மையான ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டம் தான், தற்போது ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம். பெரும் தொழிலதிபர்களும் ஊழல் அரசியல்வாதிகளும் இணைந்து ஆயிரம் கோடி, லட்சம் கோடி, ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் என ஊழல் செய்தனர். ஊழல் செய்த அரசியல்வாதிகள் அடைக்கப்பட்ட சிறையில், ஊழலுக்கு எதிராகப் போராடிய அன்னா ஹசாரேவையும் மத்திய அரசு அடைத்தது. வெறும் லோக்பால் மசோதாவால் மட்டும் ஊழல் மறையாது. நீதித்துறையும் இந்த அரசுக்கு வளைந்து கொடுக்கிறது. அனைத்தையும் மாற்றும் விதமாக ஒரு இயக்கமாக இருக்க வேண்டும். வன்முறை, விலைவாசி உயர்வு, தீண்டாமை இவற்றுக்கு எதிராக மட்டுமல்ல; ஊழலுக்கு எதிராகவும் பெண்கள் போராட வேண்டும். இவ்வாறு, சுபாஷினி அலி பேசினார். அகில இந்திய பொது செயலாளர் சுதா சுந்தரராமன் பேசுகையில், ''மத்திய அரசுக்கு பல சவால்களை விடுத்து பெண்கள் போராட வேண்டும். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. வெங்காயம் முதல் தங்கம் வரை விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. சமுதாய முன்னேற்றம், சமத்துவம், அரசியல், பொருளாதார சுதந்திரம் பெற பெண்கள் போராட வேண்டும்,'' என்றார். மாவட்ட துணை தலைவர் விஜயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை