உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.பி.என்., காலனி சந்திப்பில் ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்டாப்

கே.பி.என்., காலனி சந்திப்பில் ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்டாப்

திருப்பூர் : திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் முக்கிய வழித்தடமாக ஊத்துக்குளி ரோடு உள்ளது. இந்த ரோட்டில், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. ஊத்துக்குளி ரோட்டில் வரும் பஸ்கள், கே.பி.என்., காலனி ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்கின்றன. ஊத்துக்குளி ரோட்டில் கே.பி.என்., காலனி ரோடு சந்திப்பு பகுதியில், ஸ்டாப்பிங் இல்லாதபோதும் பஸ்கள் நின்று செல்கின்றன. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர், கே.பி.என்., காலனி சந்திப்பில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அங்கு போதிய இட வசதி இல்லாமல், ரோட்டோரத்தில் நிற்கும் பயணிகள், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. ஊத்துக்குளி ரோட்டில் இருந்து கே.பி.என்., காலனி ரோட்டை பயன்படுத்த பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் திரும்பும்போது, காத்திருக்கும் பயணிகள் அங்குமிங்குமாக ஓடி ஒதுங்குகின்றனர். போக்குவரத்தை கவனிக்காமல், சிலர் பஸ் பிடிக்க பின்னால் செல்வதால், போக்குவரத்து ஸ்தம்பிப்பதோடு, வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் தொடர்கிறது. பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக பஸ்கள் நிற்கும்போது, நேராக செல்லும் வாகனங்கள் போதிய இடம் இன்றி, ரோட்டோரத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றன. அந்நேரங்களில் பஸ்களில் இருந்து இறங்குவோர், ஏறுவோர் வாகனங்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. சில தனியார் பஸ்கள், மாணவர்களை ஏற்றுவதற்காக அதிக நேரம் நிறுத்தப்படுகின்றன. சரக்குகளுடன் வரும் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் கே.பி.என்., காலனி ரோட்டை பயன்படுத்த திரும்ப முடியாமல், அங்கேயே நின்று விடுவதால், வாகனங்கள் தேக்கமடைந்து விடுகின்றன. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், கே.பி.என்., காலனி ரோடு சந்திப்பு பகுதியில் பஸ்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும். ஊத்துக்குளி மெயின் ரோட்டில், இட வசதியுள்ள பகுதியில் நின்று, பயணிகளை ஏற்றி இறக்கிச்செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ