உடுமலை: 'தரமான பட்டு முட்டை மற்றும் இளம் புழுக்கள் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, பட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ், செயலர் பொன்னுச்சாமி, பொருளாளர் கனகராஜ் கூறியதாவது:பட்டு முட்டை குறைபாடு காரணமாகவும், மத்திய பட்டு வாரியத்தில் அங்கீகரிக்கப்பட்ட இளம் புழு வளர்ப்பு மையங்களில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் உற்பத்தி செய்து, தரமில்லாத புழுக்கள் வழங்கப்படுவதால், கூடு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.கடந்த 2018 முதல், 2020ம் ஆண்டு வரை, அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மேல், பட்டு முட்டைகள் விற்பனை செய்து, கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் பங்களிப்பு, 290, அரசு பங்களிப்பு தொகை, 509 என, 799 ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.கடந்தாண்டு, 179 ரூபாய் அரசே செலுத்திய போது, வழங்கப்பட்ட அதே காப்பீட்டு பலன்கள், தற்போது, பிரீமியம் தொகை, 4 மடங்கு அதிகரித்தும் வழங்கப்படுகிறது; காப்பீடு பலன்கள் உயர்த்தப்படவில்லை.எனவே, புழுவளர்ப்பு தோல்வியடைந்தால், ஆயிரம் முட்டை தொகுதிக்கு, 4 லட்சம், புழு வளர்ப்பு மனை சேதம் அடைந்தால், 3 லட்சம், விவசாயிகள் விபத்து காரணமாக உயிரிழந்தால், 5 லட்சம், மருத்துவ செலவு, 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்.புழுக்கள் வீரிய குறைபாடு காரணமாக, விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மார்ச் முதல் மே வரை , கடுமையான வெயில் காரணமாக உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.காப்பீட்டு நிறுவனம் வாயிலாக, உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். வறட்சியால் மல்பெரி செடிகள் காய்ந்த விவசாயிகளுக்கு, மறு நடவுக்கு, 40 ஆயிரம் ரூபாய் வழங்கவும், தரமான முட்டை, இளம்புழு வினியோகத்தை உறுதி செய்யவும், வழங்கப்படும் ரசீதுகளை முறைப்படுத்த வேண்டும்.இதை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தனர்.